கொச்சி, டிச. 5- பிபிசிஎல் பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் வியாழனன்று கொச்சி கப்பல் சாலையில் அணிதிரண்டு நெடும்பயணமாக சென்று ஆலைமுன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பிபிசிஎல் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக வலுவான முழக்கத்துடன் இந்த நெடும்பயணம் நடத்தப்பட்டது. இந்த பயணத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் ஆசிக் அபு பங்கேற் றார். பிபிசிஎல் நிறுவனத்தை விற்கக் கூடாது எனவும், நாட்டுக்காக நடக்க தானும் தயார் எனவும் ஏற்கனவே முகநூல் பதிவில் ஆசிக் அபு தெரிவித்திருந்தார்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் உட்பட லாபத்தில் செயல்பட்டு வரும் ஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதில் கொச்சி பிபிசி எல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசு ரூ.27.75 கோடியில் நிறுவிய பிபிசிஎல் ரூ.3.39 லட்சம் கோடிக்கு விற்றுவரவு செய்து ரூ.7,132 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ரூ.48,182 கோடிக்கும் மேற்பட்ட தொகையில் நிறு வனத்தின் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இது இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய தொழில் நிறுவனமாகும். இதன் விற்பனையால், கேரளத்தின் ரூ.5426 கோடி கனவுத்திட்டமான பெட்ரோகெமிக்கல் பார்க் கேள்விக்குறியாகும். பிபிசிஎல் விற்ப னைக்கான நகர்வை மத்திய அரசு துவக்கிய உடனே பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் வாங்குவதற்கான விருப்பம் தெரிவித்தன. இதில் அமெரிக்க எண்ணெய் கம்பெனியான ‘டெலுரியன்’ முன்னிலையில் உள்ளது.
நடைபயணத்தை சிபிஎம் எர்ணாகுளம் மாவட்ட செயலாளர் சி.என்.மோகனன் துவக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சதீஷ், செயலாளர் ஏ.ஏ.ரஹீம், பொரு ளாளர் எஸ்.கே.சஜீஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நடைபயணத்தில் அணி வகுத்தனர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜீவ், சட்டமன்ற உறுப்பினர் எம்.சுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிபிசிஎல் தலைமையகம் முன்பு சங்கமித்த நடைபயண பேரணியில் சங்கத்தின் அகில இந்திய தலை வர் பி.ஏ.முகம்மது ரியாஸ் உரையாற்றி னார்.